நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு


நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 9:12 PM GMT (Updated: 10 Sep 2021 9:12 PM GMT)

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 
மிகப்பொிய மண் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. 
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
 பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. 
நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 42 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 496 கன அடியும், உபரிநீராக வினாடிக்கு 2 ஆயிரத்து 504 கன அடியும்  என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரம் அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 21 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே தொடர்ந்து நீடித்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 496 கன அடியும், உபரிநீராக வினாடிக்கு 3 ஆயிரத்து 504 கன அடியும் என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story