மருமகனை அடித்துக்கொன்ற மாமனார்


மருமகனை அடித்துக்கொன்ற மாமனார்
x
தினத்தந்தி 13 Sep 2021 8:10 PM GMT (Updated: 13 Sep 2021 8:10 PM GMT)

குடிபோதையில் மகளை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த மாமனார், தனது மருமகனை அடித்துக்கொன்றார்.

செக்கானூரணி,

குடிபோதையில் மகளை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த மாமனார், தனது மருமகனை அடித்துக்கொன்றார்.

 மகளை அடித்து உதைத்தார்

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள பூச்சம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சந்தனம்(வயது 65). இவர் தனது மகள் மல்லிகாவை மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த பால்பாண்டி (வயது 40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். திருமணம் முடிந்த பால்பாண்டி  பூச்சம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பால்பாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மது குடித்துவிட்டு வந்து தினமும் மல்லிகாவை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.

அடித்து கொலை

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வந்து மல்லிகாவை அடித்துள்ளார். இதனால் அவர் அருகில் இருந்த அவருடைய தந்தை வீட்டிற்குள் சென்றார். மனைவி அவரது தந்தை வீட்டிற்கு சென்றதை அறிந்த பால்பாண்டி, கோபத்தில் அவரை அடிப்பதற்காக கையில் ஆயுதத்துடன் சென்றார். இதை பார்த்த சந்தனம் மகளை அடிக்க ஆயுதத்துடன் மருமகன் வருகிறாரே என ஆத்திரமடைந்தார்.
உடனே அருகில் இருந்த அடுப்பு ஊத பயன்படும் இரும்பு ஊதுகுழலை எடுத்து பால்பாண்டியின் பின்தலையில் ஓங்கி அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தனது கணவர் தன் கண்முன்னே இறந்ததை அறிந்து மல்லிகா அவரது உடலை பார்த்து கதறி அழுதார். தன்னுடைய அவசர புத்தியால் மகளின் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே என கண்கலங்கினார் சந்தனம்.

கைது

இதுகுறித்து தகவலறிந்த செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த பால்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த செக்கானூரணி போலீசார் சந்தனத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story