காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிப்பு


காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 1:32 AM GMT (Updated: 14 Sep 2021 1:32 AM GMT)

காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்ெடருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. 
குறிப்பாக கடந்த சில மாதங்களாக தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே இந்த சாலையை யானைகள் கடப்பது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து அதில் கரும்புகளை பிடுங்கி தின்பதும் தொடர்கதையாகி வருகிறது. 
இந்நிலையில் நேற்று இரவு காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதிக்கு யானை ஒன்று வந்தது. பின்னர் அந்த யானையானது அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது. இதையடுத்து யானை அந்த சாலையில் அங்கும், இங்குமாக உலா வந்தது. இதன்காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story