காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி ஓடியதால் பரபரப்பு


காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 3:17 PM GMT (Updated: 14 Sep 2021 3:17 PM GMT)

காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 23). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், குற்ற விசாரணை முறிவு சட்டம் 110 பிரிவின் கீழ் நன்னடத்தை பிணையில் விடுவிக்க போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் நன்னடத்தை பிணையில் விடுவிக்க 2 ஜாமீன்தாரர் தேவை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோர்ட்டு வளாகத்தின் பின்புறம் தனது வீடு உள்ள பிள்ளையார் பாளையம் பகுதிக்கு செல்ல கோர்ட்டு வளாக சுற்றுச்சுவர் ஏறி குதித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த போலீசார் தவறாக புரிந்துகொண்டு கோர்ட்டு வளாகத்தில் இருந்த கைதி தப்பி ஓடியதாக அவரை தேடியுள்ளனர்.

நன்னடத்தை ஜாமீன்

இந்நிலையில் நன்னடத்தை ஜாமீனுக்கு 2 ஜாமீன்தாரர்களை தயார் செய்துகொண்டு ரவுடி பத்மநாபன் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதையடுத்து கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்ட பத்மநாபனை நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்க சிவ காஞ்சீ போலீசார், காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர். பிறகு ரவுடி பத்மநாபன் ஓராண்டு நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

Next Story