உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளுக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளுக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x
தினத்தந்தி 14 Sep 2021 9:21 PM GMT (Updated: 14 Sep 2021 9:21 PM GMT)

உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

ஈரோடு
உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
27 பதவிகள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2019-ம் ஆண்டு நிரப்பப்பட்ட பதவிகளில் இறப்பு, பதவி விலகல் காரணமாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி வரை 27 காலியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. இதற்கான தற்செயல் தேர்தல் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, நம்பியூர், டி.என்.பாளையம், பவானிசாகர் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.
அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண்- 5, ஈரோடு ஒன்றியம் வார்டு உறுப்பினர் எண்- 4, பெருந்துறை ஒன்றியம் வார்டு உறுப்பினர் எண்- 10 மற்றும் 4 ஊராட்சி தலைவர் பதவி, 20 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல்
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வருகிற 22-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 23-ந் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். 25-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம்.
வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 16-ந் தேதி தேர்தல் நடவடிக்கை நிறைவு பெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்களின் பதவி ஏற்பு முதல் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறிஉள்ளார்.

Next Story