கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு- வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்


கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு- வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 16 Sep 2021 10:32 PM GMT (Updated: 16 Sep 2021 10:32 PM GMT)

கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்த போதிலும், வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாக நடந்தது.

ஈரோடு,
கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்த போதிலும், வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாக நடந்தது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 50 வளர்ப்பு கன்றுகள் கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கன்றுகுட்டிகளை வாங்கிச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பசு மாடுகள் 300-ம், எருமை மாடுகள் 100-ம் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.
விற்பனை மந்தம்
இதில் பசு மாடு ஒன்று ரூ.30ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, ‘கடந்த வாரத்தைவிட இந்த வாரம் மாடுகள் வரத்து அதிகமாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை சற்று மந்தமாக நடந்தது. வெளிமாநில வியாபாரிகள் வரத்தொடங்கினால் மாடுகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.


Next Story