பவானிசாகர் அணை கரையில் முகாமிட்ட யானைகள்


பவானிசாகர் அணை கரையில் முகாமிட்ட யானைகள்
x
தினத்தந்தி 29 Sep 2021 8:05 PM GMT (Updated: 29 Sep 2021 8:05 PM GMT)

பவானிசாகர் அணை கரையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணை கரையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
முகாமிட்ட யானைகள்
பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியை ஒட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள அணையின் கரை பகுதியில் முட்புதர் காட்டில் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் அணையின் நீர்தேக்க பகுதியில் காட்டு யானைகள் சுற்றி திரிவதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாமல் அச்சமடைந்துள்ளார்கள்.
நேற்று பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி அமைந்துள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நீரேற்று நிலையம் மற்றும் பவானிசாகர் பேரூராட்சி நீரேற்று நிலையம் பகுதியில் 2 யானைகள் சுற்றித் திரிந்தன. இதன் காரணமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் யானைகளை கண்டு பயந்து நீரேற்று நிலையத்தில் பதுங்கிக் கொண்டனர். 
இரவில் அட்டகாசம்
 யானைகள் காட்டுக்குள் செல்லாமல் பவானிசாகர் அணையின் கரையிலேயே முகாமிட்டுள்ளன. கீழ்பவானி வாய்க்காலை கடந்து சென்று பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு நுழைவாயில் கேட் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வருவதால் பவானிசாகர் பகுதியில் பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
அதனால் அணையின் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பவானிசாகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story