கோபியில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கடத்தூர்
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
விபத்து
கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி தங்கம்மாள் (வயது 64). கடந்த 14-9-2016 அன்று தங்கம்மாள், அவருடைய தம்பி ரங்கசாமியுடன், மோட்டார்சைக்கிளில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். கோபியை அடுத்த கெட்டிச்செவியூர் பள்ளிபாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் ரங்கசாமியின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தங்கம்மாள் காயம் அடைந்தார்.
இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த தனக்கு நஷ்டஈடு வழங்க கோரி தங்கம்மாள் கடந்த 25-4-2017 அன்று கோபி 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜப்தி
வழக்கை நீதிபதி ஜெகநாதன் விசாரித்து தங்கம்மாளுக்கு அரசு போக்குவரத்து கழகம், ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து 120 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கடந்த 19-8-2019 அன்று உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 6-1-2020 அன்று நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த 26-11-2020 அன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் கோபி பஸ் நிலையத்தில் இருந்து கோவை செல்வதற்காக நின்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்றை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.
Related Tags :
Next Story






