திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2021 9:49 PM GMT (Updated: 30 Sep 2021 9:49 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
27 கொண்டை ஊசி வளைவுகள்
தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இதனால் தினமும் திம்பம் மலைப்பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 
குறிப்பாக அதிக அளவுக்கு பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
லாரி கவிழ்ந்து விபத்து
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. 
இந்த லாரியானது நேற்று அதிகாலை 3 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். 
போக்குவரத்து பாதிப்பு
இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு காலை 7 மணி அளவில் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் அவதிப்பட்டனர். 

Next Story