திருச்செந்தூரில் பிரபல ரவுடி கைது

திருச்செந்தூரில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகிலுள்ள வீரபாண்டியன்பட்டனத்தை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் (வயது 22). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் நள்ளிரவில் திருச்செந்தூர் ரெயில் நிலையம் பகுதியில் சென்ற இவரை, தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வம் என்ற செல்வமுருகன் (34) வழிமறித்துள்ளார். திடீரென்று அனந்தகிருஷ்ணனை தாக்கி மிரட்டி அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்நிலையம் அருகில் செல்வமுருகனை கைது செய்தனர். இவர் பிரபல ரவுடி என போலீசார் தெரிவித்தனர்.
இவர் மீது தூத்துக்குடி தாளமுத்துநகர், திண்டுக்கல், ஆழ்வார்திருநகரி, சுசீந்திரம், தாமரைகுளம், கோவை மாவட்டம் ஆனைமலை, குமரி, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் 7 கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும், கடந்த 2011-ம் ஆண்டு குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில வனத்துறை ஊழியரையும், அவரது மனைவியையும் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார், என்றும் போலீசார் தெரிவித்தனர்.
-----------------
Related Tags :
Next Story