மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 4:59 PM GMT (Updated: 1 Oct 2021 4:59 PM GMT)

கேரள வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை

கேரள வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. 

மேல்நீரார் அணை

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணைகளாக விளங்கும் சோலையாறு அணை, மேல்நீரார் அணை, கீழ் நீரார் அணை ஆகியவை உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் ஆண்டுதோறும் தமிழக-கேரள நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி பல்வேறு காலக்கட்டங்களில் கேரளாவிற்கு திறக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தென்மேற்கு பருவமழை காலத்தில் சோலையாறு அணையில் இருந்து சோலையாறு மின்நிலையம்-2 இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்த பிறகு தண்ணீர் கேரளாவிற்கு திறக்கப்படுகிறது.

தண்ணீர் திறப்பு

இதேபோல் மற்றொரு ஒப்பந்தப்படி அக்டோபர் மாதம் 1-ந் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை மேல்நீரார் அணைக்கு வரக்கூடிய தண்ணீரை கேரளாவில் உள்ள வனப்பகுதியின் செழிப்பு மற்றும் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க திறக்க வேண்டும்.

இதையொட்டி வால்பாறை பொதுப்பணித்துறையின் நீர் ஆதாரத்துறை உதவிப்பொறியாளர்கள் மற்றும் கேரள பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் முன்னிலையில் நேற்று காலை 8 மணிக்கு மேல்நீரார் அணைக்கு வந்து கொண்டு இருந்த 242 கன அடி தண்ணீர் அடிமட்ட மதகு மூலம் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. அந்த தண்ணீர் காலை 9 மணியளவில் கீழ்நீரார் அணையை வந்தடைந்தது. 

ஜனவரி மாதம் வரை...

அதன்பின்னர் கீழ்நீரார் அணையின் அடிமட்ட மதகு திறக்கப்பட்டு, கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை வெளியேற்றப்படும். 

கடந்த ஆண்டு 855 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு அவ்வப்போது வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருவதால், கடந்த ஆண்டைவிட கூடுதல் தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற வாய்ப்பு உள்ளது.


Next Story