கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்திய பெருமை மு.க.ஸ்டாலினை சேரும்: அமைச்சர் நாசர்


கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்திய பெருமை மு.க.ஸ்டாலினை சேரும்: அமைச்சர் நாசர்
x
தினத்தந்தி 11 Oct 2021 3:04 PM GMT (Updated: 11 Oct 2021 3:04 PM GMT)

நாட்டிலேயே கொரோனா 2-வது அலையை கட்டுபடுத்திய பெருமை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சேரும் என கும்மிடிப்பூண்டியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை ெதாடங்கி வைத்த அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

தடுப்பூசி முகாம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நேற்று 5-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பால்வளத்துறை அமைச்சர் நாசர் ெதாடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.,டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி எம்.எல்.ஏ.துரைசந்திரசேகர், வட்டார மருத்துவர் கோவிந்தராஜ், செயல் அலுவலர் யமுனா, தாசில்தார் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு அமைச்சர் நாசர் ஆப்பிள்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின்னர், அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைய தினம் (அதாவது நேற்று) தற்போது 1,000 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் 4 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய முகாம் வாயிலாக இன்றைக்கு மட்டும் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சருக்கு பெருமை

திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 18 லட்சத்து 88 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 66 சதவீத நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். 24 சதவீத பேர் 2-ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 751 பேருக்கும், 2-ம் கட்ட முகாமில் 82 ஆயிரத்து 556 பேருக்கும், 3-ம் கட்ட முகாமில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 132 பேருக்கும், 4-ம் கட்ட முகாமில் 74 ஆயிரத்து 40 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்திய பெருமை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையே சேரும். மாவட்டத்தில் தகுதி வாய்ந்த மீதம் உள்ள 6 லட்சத்து 43 ஆயிரத்து 722 பேருக்கும் தடுப்பூசி செலுத்தி 100 சதவிகித இலக்கை எட்டுவதற்கு பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் நாசர் தெரிவித்தார்.


Next Story