குற்றியார் தரைப்பாலம் உடைந்தது


குற்றியார் தரைப்பாலம் உடைந்தது
x
தினத்தந்தி 12 Oct 2021 10:03 PM GMT (Updated: 12 Oct 2021 10:03 PM GMT)

மலையோர பகுதியில் பெய்த கனமழையால் குற்றியார் தரைப்பாலம் உடைந்தது.

திருவட்டார்:
மலையோர பகுதியில் பெய்த கனமழையால் குற்றியார் தரைப்பாலம் உடைந்தது.
கனமழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை அருகே மலையோர பகுதியில் பெய்த கன மழையால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், குற்றியார் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. நேற்று காலை தண்ணீர் சற்று வடிந்ததும் அந்த இடத்தை பார்த்த போது தரைப்பாலத்தின் ஒருபகுதி சுமார் 10 அடிநீளத்துக்கு உடைந்து அடித்து செல்லப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 
அதிகாரிகள் ஆய்வு
பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சங்கரலிங்கம், நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் பாஸ்கர், திருவட்டார் தாசில்தார் ரமேஷ், விளவங்கோடு தாசில்தார் விஜயலட்சுமி, திருவட்டார் வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். 
முதற்கட்டமாக சப்பாத்து பாலத்தின் மடையில் தேங்கி நிற்கும் செடி கொடிகள், கற்களை அகற்றி தண்ணீர் செல்வதற்கு வசதி ஏற்படுத்தவும், உடைந்து போன பகுதியில் தற்காலிகமாக கற்கள் போட்டு பாதை அமைத்து போக்குவரத்தை சரிசெய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Next Story