காங்கிரஸ் முஸ்லிம் சமுதாயத்திற்கு டிக்கெட் வழங்காதது ஏன்? - குமாரசாமி கேள்வி


காங்கிரஸ் முஸ்லிம் சமுதாயத்திற்கு டிக்கெட் வழங்காதது ஏன்? - குமாரசாமி கேள்வி
x
தினத்தந்தி 19 Oct 2021 8:04 PM GMT (Updated: 19 Oct 2021 8:04 PM GMT)

சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி முஸ்லிம் சமுதாயத்திற்கு டிக்கெட் வழங்காதது ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:

 முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தவறான பிரசாரம்

  சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் மதசார்பற்ற வாக்குகளை பிரிக்கும் நோக்கத்தில் 2 தொகுதியிலும் எங்கள் கட்சி முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்று சித்தராமையா கூறுகிறார். அவர் இவ்வாறு கருத்துகளை கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அத்தகைய நிலைக்கு என்னை காங்கிரஸ் தள்ளியுள்ளது. காங்கிரஸ் கட்சி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு டிக்கெட் வழங்காதது ஏன்?.

  சிந்தகி தொகுதியில் எங்கள் கட்சியின் விசுவாசமிக்க குடும்பத்தை சேர்ந்தவருக்கு டிக்கெட் வழங்கியுள்ளோம். இதில் காங்கிரஸ் ஏன் வருத்தப்படுகிறது. இடைத்தேர்தலில் பா.ஜனதா-ஜனதா தளம் (ஏஸ்) கட்சிகள் இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் சிந்தகி தொகுதியில் காங்கிரஸ் 2-வது இடத்தை கூட பிடிக்கவில்லை. அதனால் காங்கிரஸ் தவறான பிரசாரம் செய்வது ஏன்?.

நீர்ப்பாசன திட்டங்கள்

  காங்கிரஸ் விவகாரம் எங்களுக்கு தேவை இல்லை. நாங்கள் மக்களிடம் ஓட்டுகளை கேட்கிறோம். சித்தராமையா தான் எங்கள் கட்சியை குறை சொல்லி வாக்கு கேட்கிறார். ஓட்டு கேட்க காஙகிரசிடம் எந்த விஷயமும் இல்லை. ஆனால் எங்கள் கட்சிக்கு அத்தகைய நிலை இல்லை.

  சிந்தகி சட்டசபை தொகுதியில் ஏராளமான நீர்ப்பாசன திட்டங்களை நான் செயல்படுத்தினேன். எனது தந்தை முதல்-மந்திரியாக இருந்தபோதும், பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த திட்டங்களை முன்வைத்து நாங்கள் ஓட்டு கேட்கிறோம்.
  இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story