வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரி வழக்கு
வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரிய வழக்கு மதுைர ஐகோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.
மதுரை,
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்த சோழசூரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தின் பல்வேறு பணிகளில் பெரும்பாலான இடங்களில் வடஇந்தியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக ரெயில்வே பணிமனையில் 1,765 நபர்களுக்காக வழங்கப்பட்ட அப்ரண்டீஸ் பயிற்சியில் 1,600 பேர் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியானது.
இதுபோல பல்வேறு வேலைவாய்ப்புகளை வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெற்றுவருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள ஏராளமானவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி இது ஏற்கத்தக்கதல்ல. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
எனவே தமிழக மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் அல்லது அரசாணையை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழக அரசின் தலைமை செயலாளர், சட்டமன்ற செயலாளர் ஆகியோரை நீக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
-------
Related Tags :
Next Story