பவானி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல் அரசு பெண் டாக்டர், கணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு


பவானி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல் அரசு பெண் டாக்டர், கணவர் உள்பட  3 பேர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 29 Oct 2021 8:46 PM GMT (Updated: 29 Oct 2021 8:46 PM GMT)

பவானி அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பெண் டாக்டர் மற்றும் அவருடைய கணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி செத்தனர்.

பவானி
பவானி அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பெண் டாக்டர் மற்றும் அவருடைய கணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி செத்தனர்.
டாக்டர் 
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா மேச்சேரி அருகே உள்ள உடையனூர் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 53). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். 
இவருடைய மனைவி இந்திராணி (51). இவர் மேட்டூர் அருகே உள்ள வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு விகாஷினி (15) என்ற மகளும், இளமுகில் (11) என்ற மகனும் உள்ளனர். 
உடல் நலக்குறைவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவநாதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஒரு காரில் தேவநாதன், இந்திராணி ஆகியோர் சென்றனர். 
அவர்களுடன் உதவிக்காக மேச்சேரியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் சத்தியசீலன் (24) என்பவரும் சென்றார். காரை தேவநாதன் ஓட்டினார். 
நேருக்கு நேர் மோதல்
கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் மேச்சேரி நோக்கி அவர்கள் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.  ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடப்பநல்லூர் பிரிவு அருகே நள்ளிரவில் வந்தபோது எதிரே வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 
உடல் நசுங்கி சாவு
இந்த விபத்தில் அப்பளம் போல் கார் நொறுங்கியது. இதில் தேவநாதன், இந்திராணி, சத்தியசீலன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த 3 பேரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரின் இடிபாடுகளுக்கு இடையே இறந்தவர்களின் உடல்கள் சிக்கி இருந்ததால் பொக்லைன் எந்திரம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களை நேற்று அதிகாலை 2 மணி அளவில் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 
வலைவீச்சு
விபத்தில் இறந்த சத்தியசீலனுக்கு சுகன்யா (22) என்ற மனைவியும், இஷாந்த் அத்வா (4) என்ற மகனும், பிறந்து 6 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளனர்.  விபத்து ஏற்பட்டதும், லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை  தேடி வருகிறார்கள். 
விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story