உபரிநீர் திறப்பு நிறுத்தம்: பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்


உபரிநீர் திறப்பு நிறுத்தம்: பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2021 12:13 AM GMT (Updated: 2 Nov 2021 12:13 AM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், இனி அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், இனி அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 
அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. 
102 அடியை எட்டியது
தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. 
பவானிசாகர் அணையின் பாதுகாப்பு விதிமுறைப்படி அக்டோபர் மாதம் இறுதி வரை 102 அடி வரை மட்டுேம தண்ணீர் தேக்க வேண்டும். நவம்பர் 1-ந் தேதியில் இருந்து தான் 105 அடிக்கு தண்ணீர் தேக்க வேண்டும். இதனால் கடந்த 12-ந் தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. 
உபரிநீர் திறப்பு நிறுத்தம்
நேற்று நவம்பர் 1-ந் தேதி என்பதால் அணையின் விதிமுறைப்படி, 102 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்றில் இருந்து நிறுத்தப்பட்டது. இனி அணையில் 105 அடிக்கு தண்ணீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 827 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும், ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 

Next Story