பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள்


பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Nov 2021 9:15 PM GMT (Updated: 2 Nov 2021 9:15 PM GMT)

பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு-
பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 
பசுமை பட்டாசு
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்டவை மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிக சத்தத்தின் காரணமாக குழந்தைகள், வயதானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
மாசற்ற தீபாவளி
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையுடனும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்து உள்ள நேரத்தில், உரிய இடங்களில், கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story