கடம்பூர் அருகே மோட்டார் சைக்கிள்-ஜீப் மோதல்; 2 வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்


கடம்பூர் அருகே மோட்டார் சைக்கிள்-ஜீப் மோதல்; 2 வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Nov 2021 9:07 PM GMT (Updated: 6 Nov 2021 9:07 PM GMT)

கடம்பூர் அருகே மோட்டார்சைக்கிளும், ஜீப்பும் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே மோட்டார்சைக்கிளும், ஜீப்பும் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
தற்காலிக பணியாளர்
கடம்பூர் அருகே உள்ள இருட்டிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). குத்தியாலத்தூர் ஊராட்சியில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் கணபதிபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (29). கூலித் தொழிலாளி.
2 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருட்டிபாளையத்துக்கு சென்றுகொண்டு இருந்தார்கள். சதீஷ் மோட்டார்சைக்கிளை ஓட்டினார். பழனிச்சாமி பின்னால் உட்கார்ந்து இருந்தார். 
மோதல்
இந்தநிலையில் ஜீவா நகர் அருகே ஒரு வளைவில் மோட்டார்சைக்கிள் சென்றபோது, எதிரே ஒரு ஜீப் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் ஜீப்பும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  மேலும் ஜீப் நிற்காமல் சதீசின் மோட்டார்சைக்கிளை தொடர்ந்து வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.  இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து சதீஷ், பழனிச்சாமி மற்றும் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த காடுபசுவன்மாளத்தை சேர்ந்த ரங்கன் (45), கார்த்திகேயன் (30) ஆகிய 4 பேரும் வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள்.
2 பேர் சாவு
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சதீஷ், பழனிச்சாமி இருவரும் நேற்று அதிகாலை இறந்தார்கள். ரங்கன், கார்த்திகேயன் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உறவினர்கள் கதறல்
இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஜீப்பை தேடி வருகிறார்கள்.  விபத்தில் இறந்த சதீசுக்கு நவீனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பழனிச்சாமிக்கு அம்மாசை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளார். சதீஷ், பழனிச்சாமியின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

Next Story