வால்பாறையில் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


வால்பாறையில் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 17 Nov 2021 5:12 PM GMT (Updated: 17 Nov 2021 5:12 PM GMT)

வால்பாறையில் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை

வால்பாறையில் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து காட்டு  யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

காட்டு யானைகள் 

வால்பாறையில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு, நள்ளிரவு நேரத்தில் அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. 

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள பன்னிமடை எஸ்டேட் பகுதி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள், அங்குள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருந்தன. 

பள்ளி வளாகத்துக்குள் புகுந்தது 

பின்னர் அந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. அங்குள்ள தோணிமுடி எஸ்டேட் 2-வது பிரிவில் இருக்கும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நுழைந்தது. பின்னர் அவை வகுப்பறையின் கதவு, ஜன்னலை சேதப்படுத்திவிட்டு, சத்துணவு கூட சுவற்றை உடைத்து சேதப்படுத்தியது. 

பிறகு அதற்குள் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து சாப்பிட்டதுடன், முட்டைகளை கீழே தூக்கிப்போட்டு சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது. 

தொழிலாளர்கள் அச்சம் 

இது குறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மானாம்பள்ளி வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த காட்டு யானை களை வனப்பகுதிக்குள் துரத்தினார்கள். 

தொடர்ந்து அந்த காட்டு யானைகள் தோணிமுடி எஸ்டேட் பகுதியை ஒட்டிய வனப்பகுதிக்குள் முகாமிட்டு உள்ளது. எனவே அவை நள்ளிரவில் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வரக்கூடும் என்பதால் அந்தப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். 

துரத்த வேண்டும் 

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வனப்பகுதியை ஒட்டி 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. எனவே அவை இரவு நேரத்தில் வெளியே வரும் என்பதால் வனத்துறையினர் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு, யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் துரத்த வேண்டும் என்றனர். 


Next Story