பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு


பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 12:33 PM GMT (Updated: 23 Nov 2021 12:33 PM GMT)

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வந்து சேரும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மபள்ளி அணையில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாக உள்ளது. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரிக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று முதல் வினாடிக்கு 176 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 14 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.


Next Story