காஞ்சீபுரத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சி


காஞ்சீபுரத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 23 Nov 2021 1:56 PM GMT (Updated: 23 Nov 2021 1:56 PM GMT)

காஞ்சீபுரம் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கி கொள்ளை அடிக்க முயன்று தப்பி ஓடிய 6 பேரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

சரமாரி தாக்குதல்

காஞ்சீபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் நிலையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் நிலையத்திற்கு 3 இருசக்கர வாகனங்களில் 6 இளைஞர்கள் வந்தனர். அங்கு பணியில் இருந்த மணிகண்டன் என்பவரை சரமாரியாக தாக்கி பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர் ஓடிவந்தனர்.

தப்பி ஓட்டம்

இதைக்கண்ட கொள்ளையர்கள் 6 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பாலுச்செட்டிச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெட்ரோல் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையடிக்க முயன்ற 6 நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

அதிரடி கைது

இந்தநிலையில், வேகவதி பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெகன்ராஜ் (வயது 20), பூந்தமல்லி அடுத்த கரையாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான 2 பேர், குமணன்சாவடியை சேர்ந்த 18 வயதானவர், செங்குன்றத்தை சேர்ந்த சதிஷ் (23), கரையான்சாவடியை சேர்ந்த பாலாஜிராஜா (19) என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், பட்டா கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த பாலுசெட்டி சத்திரம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் வெகுவாக பாராட்டினார்.


Next Story