கார் டிரைவர் வெட்டிக்கொலை


கார் டிரைவர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 30 Nov 2021 8:07 PM GMT (Updated: 30 Nov 2021 8:07 PM GMT)

கார் டிரைவரை வெட்டிக்கொன்று அலங்காநல்லூர் பகுதியில் பிணம் வீசப்பட்டது. இது தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

அலங்காநல்லூர்,

கார் டிரைவரை வெட்டிக்கொன்று அலங்காநல்லூர் பகுதியில் பிணம் வீசப்பட்டது. இது தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மெய்யப்பன்பட்டி- கோட்டைமேடு செல்லும் பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு வயலில் வெட்டுக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 
இது பற்றி தகவல் கிடைத்ததும் அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

கார் டிரைவர்

முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் தேவதானம்பட்டி பகுதியில் காமக்காபட்டியை சேர்ந்த முருகன் மகன் பாண்டியன் (வயது 39) என்பதும், இவர் மதுரை விமான நிலையத்தில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்தது. 
பாண்டியனை கொலை செய்து அவரது பிணத்தை வாகனத்தில் கடத்தி வந்து அலங்காநல்லூர் அருகே வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவரது கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story