பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக ரூ.87 லட்சம் மோசடி; பெண் கைது


பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக ரூ.87 லட்சம் மோசடி; பெண் கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 11:50 PM GMT (Updated: 6 Dec 2021 11:50 PM GMT)

பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக ரூ.87 லட்சம் மோசடி; பெண் கைது.

சென்னை,

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தைச் சேர்ந்தவர் அமுதா (வயது 39). இவர், தன்னை சென்னை தியாகராயநகரில் செயல்படும் பிரபல பங்கு மார்க்கெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக விளம்பரப்படுத்திக்கொண்டு, ஏராளமானவர்களிடம், பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி, லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இவரிடம் பணம் கொடுத்து 23 பேர் ரூ.87 லட்சம் வரை இழந்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகார்தாரர்களிடம் வாங்கிய பணத்தை முறையாக பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யாமல், மோசடி லீலைகளில் இவர் ஈடுபட்டது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடி ராணி அமுதா, போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். கடந்த 1½ வருடமாக தலைமறைவாக இருந்து கொண்டே தொடர்ந்து மோசடி லீலைகளில் ஈடுபட்டு வந்த அமுதாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story