சுரங்கப்பாதை அமைக்க குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு ரெயில்வே அதிகாரிகள் காரை சிறை பிடித்த பெண்கள்


சுரங்கப்பாதை அமைக்க குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு ரெயில்வே அதிகாரிகள் காரை சிறை பிடித்த பெண்கள்
x
தினத்தந்தி 16 Dec 2021 12:11 AM GMT (Updated: 16 Dec 2021 12:11 AM GMT)

சுரங்கப்பாதை அமைக்க குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே அதிகாரிகள் வந்த கார்களை சிறைபிடித்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கிராமத் தெரு, அண்ணாமலை நகர் ெரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் வீடுகளை காலி செய்ய ெரயில்வே துறை சார்பில் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 15 நாட்களுக்குள் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள 117 வீடுகள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ெரயில்வே துறை அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள், ெரயில்வே அதிகாரிகள் வந்த 2 கார்களை சிறை பிடித்து, கார்களுக்கு முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார், ெரயில்வே அதிகாரிகள் கார்களை சிறை பிடித்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் சமரசம்

அப்போது அவர்கள், சுரங்கப்பாதை பாதை அமைய உள்ள இடத்தில் குறைந்த வீடுகளே உள்ளன. ஆனால் ெரயில்வே கிடங்கு அமைப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் 117 குடும்பங்களை அப்புறப்படுத்தும் முடிவை ெரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

பலமுறை அதிகாரிகள் பேசிப்பார்த்தும் பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து அதே இடத்தில் அமர்ந்து இருந்தனர். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள், தாங்கள் வந்த 2 கார்களை விட்டுவிட்டு அங்கிருந்து நடந்தே சென்றுவிட்டனர். பின்னர் போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தாலுகா அலுவலகம் முற்றுகை

அதேபோல் திருெவாற்றியூர் விம்கோ நகர் ெரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க ெரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக விம்கோ நகர் அருகே சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதனால் தங்களுக்கு மாற்றும் இடம் கேட்டு சாலையோர வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இது தொடர்பான கோரிக்கை மனுவை தாசில்தாரிடம் வழங்கினர். பின்னர் ஊர்வலமாக சென்று திருவொற்றியூர் மண்டல அதிகாரியிடமும் மனு கொடுத்தனர்.

Next Story