குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து சாவு

குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து பரிதாபமாக பலியானார்.
உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 48). இவரது மனைவி காமாட்சி (45). இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும், பிளஸ்-1 படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில், ஜெயகுமார் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் காலை மனமுடைந்த காமாட்சி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதையடுத்து, உடனடியாக அவரை மீட்டு, உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தந்தை சண்முகம் உத்திரமேரூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story






