பல்லாவரம் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு

பல்லாவரம் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்து விட்டது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ராஜேஸ்வரி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு 3 வயதில் சர்வன் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம வீட்டின் கீழ் தளத்தில் வர்ணம் பூசும் வேலை நடந்தது. அதனால், குழந்தையை மாடியில் உள்ள அறையில் டி.வி. பார்க்க வைத்துவிட்டு, பெற்றோர் இருவரும் கீழ் தளத்தில் வர்ணம் பூசும் வேலையை கவனித்து கொண்டிருந்தனர்.
அப்போது மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த குழந்தை சர்வன், படிக்கட்டில் உள்ள இரும்பு கைப்பிடி வழியாக தவறி கீழே விழுந்து விட்டான். இதில் தலையில் படுகாயம் அடைந்த குழந்தையை சின்னமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை சர்வன் நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






