ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடக்கம்

கோவை-பாலக்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. அப்போது அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
கோவை-பாலக்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. அப்போது அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் மாதந்தோறும் கலெக்டர் சமீரன் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில், கோவை-பாலக்காடு நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆத்துப்பாலம் முதல் மதுக்கரை வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கடந்த 15-ந் தேதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் என 40-க்கும் மேற்பட்டோர் ஆத்துப்பாலம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கான பாதுகாப்பு பணியில் குனியமுத்தூர் சரக காவல் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோவை தெற்கு பகுதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆறுமுகம் கூறும்போது, முதல் கட்டமாக ஆத்துப்பாலத்தில் தொடங்கிய இந்த பணி மதுக்கரை வரை சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று, நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. கடைகள், வீடுகள் என கோவை-பாலக்காடு சாலையை ஆக்கிரமித்து கட்டி போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பவை அனைத்தும் அகற்றப்படும் என்றார்.
வாக்குவாதம்
இதற்கிடையில் குனியமுத்தூர் நரசிம்மபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது அதிகாரிகளிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






