நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தகவல்


நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தகவல்
x

நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் அரசாணை நிலை எண்.60, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, நாள்.16.7.2021-ல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது.

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவம் 2022-க்கு இணையவழி பதிவு முறையின் மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் அனுப்பப்படும்.

விவசாயிகள் தங்களது செல்போன் எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெற்று, இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story