தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாவு
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் காற்றாலைக்கான டர்பன் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் செங்கல்பட்டு அடுத்த பழையனூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 35) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தோட்ட வேலைகளை செய்து வந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் குழந்தை உள்ளனர். நேற்று வழக்கம்போல பணிக்கு சென்ற பால்ராஜ் தொழிற்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராவை சரி செய்து கொண்டிருந்த திம்மாவரம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவருக்கு உதவியாக இரும்பு ஏணியை பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலை வாங்க மறுப்பு
இது குறித்து தகவல் அறிந்து வந்த படாளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளனர். நிவாரணம் வழங்க நிர்வாகம் மறுத்ததால் உடலை வாங்க மறுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story






