மலைவாழ் மக்களுக்கு திருத்தப்பட்ட பட்டா வினியோகம்


மலைவாழ் மக்களுக்கு திருத்தப்பட்ட பட்டா வினியோகம்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:17 PM GMT (Updated: 12 Jan 2022 5:17 PM GMT)

கல்லார்குடி மலைவாழ் மக்களுக்கு பாரம்பரிய முறைப்படி குடிசை அமைக்க திருத்தப்பட்ட பட்டா வினியோகிக்கப்பட்டது.

வால்பாறை

கல்லார்குடி மலைவாழ் மக்களுக்கு பாரம்பரிய முறைப்படி குடிசை அமைக்க திருத்தப்பட்ட பட்டா வினியோகிக்கப்பட்டது.

மலைக்கிராமம்

ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்தில் கல்லார்குடி மலைக்கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு பெய்த பலத்த மழையால் மண் சரிவு மற்றும் நிலத்தில் விரிசல் ஏற்பட்டு குடியிருப்புகள் சேதம் அடைந்தன. இதனால் அங்கு வசித்து வந்த 21 குடும்பத்தினர், அருகில் உள்ள தெப்பக்குளமேடு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால் அங்கு வசிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். எனினும் அருகில் உள்ளதாய்முடி எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசி, அங்கு காலியாக இருக்க குடியிருப்புகளில் அவர்கள் வசிக்க ஏற்பாடு செய்தனர்.

குடிசை அமைக்கும் பணி

ஆனால் தெப்பக்குளமேடு பகுதியிலேயே வசிக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கல்லார்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை ஏற்று வனத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து தலா 1½ சென்ட் நிலம் ஒதுக்கி பட்டா வழங்கினர். தொடர்ந்து தங்களுக்கு வழங்கிய நிலத்தில் கல்லார்குடி மக்கள் குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். வரிசையாக குடிசைகள் அமைக்க நிலம் வழங்கிய நிலையில், அதை பின்பற்றாமல் அவர்கள் குடிசைகளை அமைத்ததாக கூறி வனத்துறையினர் தடுத்தனர். 

நில அளவீடு

இதனால் வரிசையாக குடிசைகள் அமைக்கும் வகையில் நிலம் ஒதுக்காமல், தங்களது பாரம்பரிய முறைப்படி குடிசைகள் அமைக்கும் வகையில் நிலம் ஒதுக்கி தர கல்லார்குடி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமையில் வரிசையாக இல்லாமல் தனித்தனியாக குடிசைகள் அமைக்கும் வகையில் அளவீடு செய்து நிலம் ஒதுக்கப்பட்டது.

திருத்திய பட்டா 

இந்த நிலையில் நேற்று வால்பாறை தாலுகா அலுவலகத்தில் கல்லார்குடி கிராம மக்களுக்கு ஏற்கனவே வழங்கிய பட்டாவில் திருத்தம் செய்து, கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அதிகாரி ராம்குமார் வழங்கினார். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனி தாசில்தார் முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெகதீஷ், மானாம்பள்ளி வனசரகர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள்  கலந்து கொண்டனர். பின்னர் நெடுங்குன்றா பழங்குடியின கிராமத்திற்கு சாலை அமைக்க ஆய்வு பணி நடந்தது.


Next Story