கோவையில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு தங்க நகை விற்பனை


கோவையில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு தங்க நகை விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2022 4:39 PM GMT (Updated: 14 Jan 2022 8:21 AM GMT)

கோவையில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு தங்க நகை விற்பனை செய்வதை இந்திய தர நிர்ணய அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.11 லட்சம் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டதுடன், 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை, ஜன.14-
கோவையில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு தங்க நகை விற்பனை செய்வதை இந்திய தர நிர்ணய அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.11 லட்சம் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டதுடன், 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலி ஹால்மார்க் முத்திரை

கோவை ராஜவீதி, கருப்பகவுண்டர் வீதி, ஒப்பணக்கார வீதி  உள்ளிட்ட பல இடங்களில் நகை பட்டறை மற்றும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் தயார் செய்யப்படும் தங்கநகைகள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

 தங்க நகைகளுக்கு மத்திய தர நிர்ணய அமைப்பின் அங்கீகாரத்தின் அடிப்படையில் ஹால்மார்க் முத்திரை பதிவு செய்யப்படுகிறது.இந்த நிலையில் சிலர் போலியாக தங்க நகைகளுக்கு 916 ஹால்மார்க் முத்திரையை பதித்து விற்பனைக்கு அனுப்பி வைப்பதாக கோவையில் உள்ள மத்திய தர நிர்ணய மேலாளர் மீனாட்சிக்கு புகார்கள் வந்தன.

ரூ.11 லட்சம் நகை பறிமுதல்

இதைத்தொடர்ந்து மத்திய தர நிர்ணய மேலாளர் மீனாட்சி தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் கோவை கருப்பகவுண்டர் வீதியில் உள்ள ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான சிறிய அளவிலான நகை குடோனிலும், இதேபோல ராஜவீதியில் கடல்அரசன் என்பவருக்கு சொந்தமான நகை குடோனிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு எந்திரம் மூலம் தங்க நகைகளுக்கு போலியாக ஹால்மார்க் முத்திரை பதிவு செய்து, விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து மீனாட்சி கூறும்போது, தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் கோவையில் 2 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் போலியாக ஹால்மார்க் முத்திரையிட்ட ரூ.11 லட்சம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலி முத்திரைகள், எந்திரங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

2 பேர் மீது நடவடிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக நகை குடோன் உரிமையாளர்களான ரவீந்திரன், கடல்அரசன் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

போலி ஹால்மார்க் முத்திரை பதித்து தங்க நகைகளை விற்பனை செய்த சம்பவம் கோவையில் நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story