தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை


தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 15 Jan 2022 3:44 PM GMT (Updated: 15 Jan 2022 3:44 PM GMT)

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

அன்னூர்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

ஆடு மேய்க்கும் தொழிலாளி

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாதேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் நடராஜ்(வயது 56). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற நடராஜ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். 

ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உடலில் பலத்த காயங்களுடன் நடராஜ் இறந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் அன்னூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கிடைத்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அவர் இறந்து கிடந்த இடத்தில் காலி மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் கிடந்தன. மேலும் ரத்த கறையுடன் கூடிய கல் கிடந்தது. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் கூறும்போது, இங்கு நடராஜ், யாரோ சிலருடன் சேர்ந்து மது குடித்து இருக்கிறார். 

போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு நடராஜ் கொலை செய்யப்ட்டு உள்ளார். அவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story