கார் மீது மரம் விழுந்து 6 பேர் காயம்

நெகமம் அருகே கார் மீது மரம் விழுந்ததில் 6 பேர் காயம் அடைந்தனர். அந்த கார் அப்பளம்போன்று நொறுங்கியது.
நெகமம்
நெகமம் அருகே கார் மீது மரம் விழுந்ததில் 6 பேர் காயம் அடைந்தனர். அந்த கார் அப்பளம்போன்று நொறுங்கியது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காரில் சென்றனர்
புதுச்சேரியை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 32). இவர் அங்குள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி அஸ்வின் தனது மனைவி காயத்ரி (30), தாயார் ரஜினிதேவி (52), உறவினர் அஜய் (30), அவருடைய மனைவி ஐஸ்வர்யா (27), மகள் சிவன்யா (4) ஆகியோருடன் ஒரு காரில் கேரளா புறப்பட்டனர்.
மரம் சரிந்து விழுந்தது
பின்னர் அவர்கள் கேரளாவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரி திரும்பினார்கள். காரை அஸ்வின் ஓட்டினார். அவர்கள் சென்ற கார் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஏரிபட்டியை அடுத்த மரம்பிடுங்கி கவுண்டன்புதூரை தாண்டி சென்று கொண்டு இருந்தது.
அப்போது சாலை ஓரத்தில் இருந்த மரம் ஒன்று சரிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம்போன்று நொறுங்கியது. இதனால் காருக்குள் இருந்த அஸ்வின் உள்பட 6 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
6 பேர் காயம்
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி சென்று காருக்குள் காயத்துடன் தவித்த 6 பேரையும் மீட்டு பொள்ளாச்சி யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த நெகமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றினார்கள். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






