ஆனைமலையில் நடந்த ஏலத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு

ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
பொள்ளாச்சி,
ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். இந்த வாரம் தைப்பூசத்தையொட்டி விடுமுறை வந்ததால் நேற்று ஏல தேதி மாற்றப்பட்டது.
அதன்படி நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கி நடத்தினார்.
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். நெகமம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர்.
வரத்து அதிகரித்தும் கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-
விலை அதிகரிப்பு
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஏலத்திற்கு 94 விவசாயிகள் 547 மூட்டை கொப்பரை தேங்காய் கொண்டு வந்தனர். 8 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். கொப்பரை தேங்காய்கள் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
அதன்படி 298 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.89.50 முதல் ரூ.91.35 வரையும், 249 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.72.30 முதல் ரூ.85 வரையும் ஏலம் போனது.
கடந்த வாரத்தை விட 143 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து இருந்தது. இதற்கிடையில் பொங்கலையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று (நேற்று) ஏலம் நடந்தது.
இதனால் கொப்பரை தேங்காய்களில் ஈரப்பதம் இல்லாமல் நன்கு காய்ந்து இருந்தது. இதனால் வரத்து அதிகரித்தும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.1.10 விலை அதிகரித்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
Related Tags :
Next Story






