குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கோவையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு வழக்குகள்
கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர் அகமது கபீர் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மீது கோவை பெரியக்கடை வீதி போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள், ஒரு அடிதடி வழக்கு, குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் 4 வழிப்பறி வழக்குகள், வெறைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் ஒரு வழிப்பறி, துடியலூர் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு என 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் கடும் வயிற்றுவலியால் அவதி அடைந்து வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் அகமது கபீர் திடீரென்று நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோவை பெரியக்கடை வீதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் அகமது கபீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வீட்டில் அகமது கபீர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அதில், நான் என்னுடைய குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. இதன்காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






