வியாபாரியை காரில் கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்; 6 பேர் கைது


வியாபாரியை காரில் கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2022 9:26 AM GMT (Updated: 23 Jan 2022 9:26 AM GMT)

ஜல்லி, மணல் வேண்டும் என்று கேட்டு வியாபாரியை காரில் கடத்தி சென்று ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டுமான பொருட்கள்

மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 36). இவர், மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனில் தொடர்புகொண்டு பேசிய மர்மநபர், “மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் சுடுகாட்டில் உறவினர் ஒருவருக்கு நாங்கள் கல்லறை கட்ட உள்ளோம். அதற்கு ஜல்லி, எம்.சாண்ட் மணல் வேண்டும்” என்றார்.

அதனை நம்பிய ஆனந்தன், அந்த நபர் சொன்ன இடத்தில் ஜல்லி, எம்.சாண்ட் மணலை இறக்கி விட்டு அதற்குரிய பணத்தை தரும்படி கேட்டார். அதற்கு அங்கிருந்த நபர், ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து தருவதாக கூறி, தான் வந்த வெள்ளை நிற காரில் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக அழைத்து சென்றார். அந்த காரில் மேலும் 4 பேர் இருந்தனர்.

மிரட்டி கடத்தல்

அப்போது ஆனந்தன், “என்னை எங்கு அழைத்து செல்கிறீர்கள்?” என கேட்டபோது காரில் இருந்த 5 நபர்களும் அவரை கத்தி முனையில் மிரட்டி ,``உன்னை கடத்தி வந்துள்ளோம். உயிருடன் விடுவிக்க வேண்டும் என்றால் உன்னுடைய மனைவியை நாங்கள் சொல்லும் இடத்துக்கு ரூ.5 லட்சத்துடன் வரச்சொல்'' என்று கூறி அவரை, அவரது மனைவியுடன் போனில் பேச வைத்தனர். தனது கணவர் போனில் சொன்னதை கேட்டு ஆனந்தனின் மனைவி நித்யா (30) அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவர்கள் கடைக்கு அருகில் கற்சிலை வடிக்கும் வேலை செய்யும் கராத்தே சரவணன் (40) என்பவர், நித்யாவிடம் கடத்தப்பட்ட உங்கள் கணவரை மீட்க நான் உதவியாக இருப்பேன் என்று ஆறுதல் கூறினார்.

பின்னர் நித்யா, கராத்தே சரவணனுடன் சேர்ந்து தனது கணவரை மீட்க வாயலூர் பாலாற்று பாலம் அருகில் சென்று அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் முதல் கட்டமாக கடத்தல்காரர்கள் கேட்ட ரூ.5 லட்சத்தில் ரூ.2 லட்சத்தை கொடுத்தார். அதற்கு அவர்கள், இந்த பணம் போதாது என்று கூறி நித்யா அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஆனந்தனை அவரது மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டனர்.

போலீசில் புகார்

இதையடுத்து ஆனந்தன், இதுபற்றி மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் தன்னை கடத்தி சென்று ரூ.2 லட்சம், 1 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றதாக புகார் செய்தார்.அதன்பேரில் தனிப்படை போலீசார் கடத்தல் கும்பல் குறித்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் ஆனந்தன் குடும்பத்துக்கு உதவி செய்வதுபோல் நடித்து வந்த கராத்தே சரவணனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரது செல்போனை கண்காணித்தனர்.

கைது

அப்போது கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் கராத்தே சரவணனை அழைத்து தீவிரமாக விசாரித்தபோது, ஆனந்தனை கடத்த முழு திட்டம் போட்டதும், நித்யாவிடம் அவரது கணவரை மீட்க உதவி செய்வது போல் நாடகமாடியதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தல் கும்பலை சேர்ந்த மூர்த்தி (40), விஜயகுமார் (39), அர்ஜூன் (35), ரஞ்சித்குமார் (38), மகேந்திரன் (40) ஆகியோரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், கடத்தல் கும்பலிடம் இருந்து 3 கத்தி போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story