கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 6:56 PM GMT (Updated: 24 Jan 2022 6:56 PM GMT)

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடந்து வந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போட்டுச் செல்கின்றனர். அந்த வகையில் நெய்வேலி அருகே வடக்கு வெள்ளூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையில் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டா

அப்போது அவர்கள், எங்களிடம் பட்டா இல்லாத காரணத்தால், என்.எல்.சி. நிறுவனம் ஊரை விட்டு வெளியேற சொல்லி கட்டாயப்படுத்துகிறது. நெய்வேலி நிறுவனம், அவர்களது பகுதியில் நாங்கள் வசித்து வருவதாக பொய்யான குற்றச்சாட்டை எழுப்பி வருகிறது. அதனால் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களை அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் என்.எல்.சி. அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு சட்டப்படி வழங்கவேண்டிய நிவாரணம் குறித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுங்கள். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story