சிங்கப்பெருமாள் கோவிலில் தொழிலாளி தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்

சிங்கப்பெருமாள் கோவிலில் தொழிலாளி தற்கொலையில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தூக்குப்போட்டு கொண்டதாக செந்தில்குமாரின் மகள் தனது தாத்தா காசிநாதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக செந்தில்குமாரின் தந்தை மகன் வீட்டுக்கு சென்று பார்த்த போது வாயில் நுரைதள்ளிய நிலையில் செந்தில்குமார் தரையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தில்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து காசிநாதன், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story