நெல் மூட்டையை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்


நெல் மூட்டையை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்
x
தினத்தந்தி 28 Jan 2022 5:55 PM GMT (Updated: 28 Jan 2022 5:55 PM GMT)

ஆன்லைன் குளறுபடியை சரிசெய்து கொள்முதல் செய்யக்கோரி நெல் மூட்டையை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணல்மேடு:
ஆன்லைன் குளறுபடியை சரிசெய்து கொள்முதல் செய்யக்கோரி நெல் மூட்டையை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை விற்பனை செய்ய முடியாமல்...
மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் சம்பா நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் ஏக்கருக்கு 60 சிப்பத்திற்கு சிட்டாடங்கல் பெற்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் குளறுபடியால் விவசாயிகளின் ஊர், பெயர் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இல்லாததால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 
சாலை மறியல் 
இந்தநிலையில் மணல்மேடு அருகே இளந்தோப்பு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் குளறுபடியால் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து பட்டவர்த்தி கடை வீதி சாலையில் நெல் மூட்டையை போட்டு, சாலையின் குறுக்கே கயிறு கட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
60 சிப்பம் பதிவு செய்யப்பட்டால் 40 சிப்பம் மட்டுமே ஆன்லைனில் கணக்கில் காண்பிப்பதாகவும், பல்வேறு கிராமங்களின் பெயர்கள் ஆன்லைனில் இல்லை என்றும், இதனால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளுடன் தவித்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
உடனடியாக ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் மணல்மேடு செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story