ரூ8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

ஆம்பூரில் நிலம் அளவீடு செய்ய ரூ8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்
ஆம்பூரில் நிலம் அளவீடு செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நிலம் அளவீடு செய்ய விண்ணப்பம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது கிராமத்தில் உள்ள 22 சென்ட் நிலம் மற்றும் 3 வீட்டு மனைகளை அளவிடுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் சேகரை கடந்த டிசம்பர் மாதம் நில அளவை குறித்து ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரியும் வேலூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 37) என்பவர் நேரில் அழைத்து பேசியுள்ளார்.
அப்போது சேகரிடம் 4 இடங்களை அளவீடு செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
நிலஅளவையர் கைது
இதுகுறித்து சேகர் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஒருமாத காலமாக பாலாஜியை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் சேகரிடம் ரசாயனம் தடவிய ரூ. 8 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.
அதனை அவர் பாலாஜியிடம் கொடுக்கும் போது வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகள் இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story