காளை விடும் திருவிழாவில் மாடு முட்டி 7 பேர் காயம்


காளை விடும் திருவிழாவில் மாடு முட்டி 7 பேர் காயம்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:45 PM GMT (Updated: 29 Jan 2022 5:45 PM GMT)

வண்டறந்தாங்கல் கிராமத்தில் நடந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 7 பேர் காயமடைந்தனர்.

காட்பாடி

வண்டறந்தாங்கல் கிராமத்தில் நடந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 7 பேர் காயமடைந்தனர்.

காளை விடும் திருவிழா

காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில காளைவிடும் திருவிழா இன்று நடந்தது. விழாவை முன்னிட்டு சாலையின் இருபுறமும் மூங்கில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தன. 

காலை 10 மணிக்கு காளைவிடும் திருவிழாவை தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) புண்ணியகோட்டி தொடங்கி வைத்தார்.  தாசில்தார் ஜெகதீஸ்வரன், வண்டறந்தாங்கல் ஊராட்சி தலைவர் எஸ்.பி.ராகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 80 காளைகள் கலந்து கொண்டன. திருவிழாவை பார்க்க வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் வண்டறந்தாங்கல் கிராமத்திற்கு வந்தனர். 

சாலைகளில் மட்டுமல்லாது வீடுகளின் மொட்டை மாடி, படிகள், கூரை மீதும், கட்டிடங்கள் மேலேயும் நின்று காளைகள் சீறிப்பாய்ந்து செல்வதை பொதுமக்கள் ரசித்து வேடிக்கை பார்த்தனர். சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் காளைகளை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

திருவிழாவை முன்னிட்டு குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ 70 ஆயிரத்து 777 என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டன.

7 பேர் காயம்

திருவிழாவில் ஓடிய மாடுகள் முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story