சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
தாமரைக்குளம்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் அந்த நாட்களில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நேற்று முன்தினம் முதல் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அரியலூர் நகரில் உள்ள கைலாசநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், ஆலந்துறையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கும், நந்திபெருமானுக்கும் 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சின்னவளையம், பாப்பாக்குடி, மீன்சுருட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் நந்திபெருமானுக்கு 16 வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க பிரதட்சனம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story