மீன் மார்க்கெட் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்

ஊரடங்கில் கூடுதல் தளர்வால் கோவையில் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கூடங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
கோவை
ஊரடங்கில் கூடுதல் தளர்வால் கோவையில் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கூடங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
ஊரடங்கில் தளர்வு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனால் கடந்த 9, 16, 23 -ந் தேதி ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் கோவையில் கடைகள், வணிக நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவையில் உள்ள அனைத்து பகுதி களிலும் கடைகள் திறந்ததால் வழக்கம்போல கூட்டம் இருந்தது.
பொதுமக்கள் குவிந்தனர்
இதேபோல் பஸ்களும் இயங்கியதால், பஸ்நிலையங்களில் கூட்டமும் அதிகரித்து இருந்தது. அதுபோன்று மீன்மார்க்கெட்டும், இறைச்சி கடைகளும் திறந்து இருந்தன. இதனால் கோவையில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
குறிப்பாக உக்கடம் மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்து மீன் வாங்கிச்சென்றனர். இதனால் மீன்விலையும் அதிகரித்து காணப்பட்டது. கோவையில் நேற்று ஒரு கிலோ ஆட்டுஇறைச்சி ரூ.800-க்கும், கறிக்கோழி ரூ.220-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடைவீதிகளில் கூட்டம்
கோைவயில் உள்ள வ.உ.சி. பூங்காவுக்கு ஏராளமான பொது மக்கள் வந்தனர். ஆனால் பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதிக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் வ.உ.சி. மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தியை பார்வையிட்டு 'செல்பி' எடுத்தபடி மகிழ்ச்சியாக சென்றனர்.
அதுபோன்று கடைவீதிகளில் வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பல இடங்களில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசின் விதிமுறையை கடைப்பிடிக்காமல் மக்கள் அலட்சியமாக இருப்பதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






