அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது


அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 9 March 2022 1:58 PM GMT (Updated: 9 March 2022 1:58 PM GMT)

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்திருப்பேரை:
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மேலப்புதுக்குடியில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். மேலப்புதுக்குடி கிராம எட்டுப் பங்கு இந்து நாடார் சமுதாயத்திற்்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 5 மணிக்கு கொடிப்பட்டம் கோவிலை சுற்றி வலம் வந்தது. அதைத்தொடர்ந்து கொடிமரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், புஷ்ப அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அய்யனாரை வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நாளாக 6-ம் திருநாளான 14-ந் தேதி காலையில் சிறப்பு பூஜையும், மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பங்குனி உத்திரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் சிறப்பு பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தினமும் இரவு ஒரு மணிக்கு அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி மேலப்புதுக்குடியில் வீதி உலா வரும் காட்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை மேலப்புதுக்குடி எட்டு பங்கு இந்து நாடார் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story