தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம். காப்பக நிர்வாகியின் மகன் கைது


தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம். காப்பக நிர்வாகியின் மகன் கைது
x
தினத்தந்தி 14 March 2022 1:12 PM GMT (Updated: 14 March 2022 1:12 PM GMT)

சோளிங்கரில் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பக நிர்வாகியின் மகனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

சோளிங்கரில் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பக நிர்வாகியின் மகனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவி பலாத்காரம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சங்கர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றை நிர்வகித்து வந்தார். சரவணனின் மகன் கார்த்திக் (வயது 28) அந்த காப்பகத்தை கண்காணிப்பதாக கூறி அங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவர் பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவியுடன் பழகி உள்ளார். காப்பக நிர்வாகியின் மகன் என்பதால் மாணவியும் சகஜமாக பேசி உள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கார்த்திக் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து மாணவியை காதலிப்பதாக நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் நிர்வாக பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் காப்பகம் மூடப்பட்டது.

கைது

இதையடுத்து அந்த மாணவி காட்பாடியில் உள்ள அரசு காப்பகத்துக்கு மாற்றப்பட்டார். அவர் அங்கு தங்கி காட்பாடியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை பார்ப்பதற்காக காப்பகத்துக்கு கார்த்திக் வந்தார். இதுகுறித்து காப்பக நிர்வாகிகள் மாணவியிடம் விசாரித்தனர். 

அப்போது கார்த்திக் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததையும், தற்போது பள்ளியில் இருந்து காப்பகம் திரும்பும்போது பின்தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் மாணவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காப்பாக நிர்வாகிகள் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர். 
மேலும் அவர் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த வேறு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story