வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு - வேளாண் அதிகாரி தகவல்


வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு - வேளாண் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 March 2022 5:24 PM IST (Updated: 19 March 2022 5:24 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை வேளாண்மை, வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு,

வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பம், புதிய எந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி போன்றவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை 2021- 22-ம் ஆண்டில் இருந்து இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து பரிசளிக்கும். இதன் தொடர்ச்சியாக உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், எந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.

அதே போன்று, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவித்து தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, முதலில் கைபேசியில் உழவன் செயலி மூலமாக தனது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். இதற்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநில குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன் பின்பு விண்ணப்பங்கள் மாநிலகுழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும் புதிய வேளாண் எந்திர கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசு வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது, 3-வது பரிசாக முறையே ரூ.60 ஆயிரம், ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். அதேபோன்று, வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நாளை (வெள்ளிக்கிழமை) யுடன் முடிவடைய இருப்பதால், தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், துணை இயக்குனர் (தோட்டக்கலைத் துறை), வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story