டாஸ்மாக் கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது


டாஸ்மாக் கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2022 11:36 AM GMT (Updated: 21 March 2022 11:36 AM GMT)

டாஸ்மாக் கடையில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு நாட்டிணக்கிணறு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சேலம் மாவட்டம் எடப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் மது வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்ற மர்ம நபர் ஒருவரும் மது வாங்குவது போல நடித்து முத்துகுமாரின் சட்டை பாக்கெட்டில் உள்ள ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி சென்றுவிட்டார்.

இதுபோல அன்றைய தினமே செங்கல்பட்டு, அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரும் கூட்டத்தில் மதுவாங்கும்போது அவருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த மர்ம நபர் ஒருவரும் தியாகராஜன் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச்சென்று விட்டார். செல்போன்களை தவறவிட்ட இருவரும் இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தனர்.

டாஸ்மாக் கடையில் பெருந்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆராய்ந்து பார்த்தபோது 2 பேர் செல்போனை திருடி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

செல்போன் திருடிய மர்ம நபர்கள் மீண்டும் வருவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாறுவேடத்தில் ராட்டிணக்கிணறு அருகேயுள்ள டாஸ்மாக் கடையின் அருகே நேற்று முன்தினம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மர்ம நபர்கள் இருவரும் மீண்டும் அதே இடத்தில் செல்போன் திருட வந்தபோது போலீசாரிடம் கையும், களவுமாக பிடிப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரனையில் அவர்கள் சென்னை, சவுக்கார்பேட்டை, வால்டாக்ஸ் ரோட்டை சேர்ந்த தண்டபாணி (வயது 35), சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த மனோரஞ்சிதம் (35) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்த செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் இவர்கள் மீது வழக்குபதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட கிளை சிறையில் அடைத்தார்.


Next Story