காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பேசுகையில்:-
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவும், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவும் சேர்ந்தே கொண்டாடப்படுகிறது. இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ல் வழங்கப்பட்ட நுகர்வோர்களுக்கான உரிமை குறித்த விழிப்புணர்வை தூண்டுவதற்காக கொண்டாடப்படுகிறது. 15.3.1983 முதல் உலகம் முழுவதும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 15-ந் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
வணிக சந்தையில் வாங்கும் பொருட்களின் தரம், பாதுகாப்பு, நியாயமான விலை, உற்பத்தியாளர் குறித்த விவரம், சேவைகள் மற்றும் அதன் விதிமுறைகள் போன்றவை குறித்து நுகர்வோர் அறிந்து அதை பயன்படுத்துவது மிக இன்றியமையாதது ஆகும்.
எனவே, இது குறித்து விழிப்புணர்வை உருவாக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கு, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் பொதுமக்களிடையே இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஆகியவை இந்த சட்டத்தை செயல்படுத்தும் கருவியாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, இணைப்பதிவாளர் லட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜோதிசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






