திருச்சியில் திடீர் கோடை மழை

திருச்சியில் திடீர் கோடை மழை பெய்தது.
திருச்சி:
சுட்டெரிக்கும் வெயில்
திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியிலேயே கோடை மழை தொடங்கியதுபோல் சுட்டெரிக்கும் வகையில் வெயிலும் அடித்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியே இருந்தது. இதேபோல் நேற்று காலை முதலே சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்தது. பகலில் வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், பாதைசாரிகள் வெயிலால் பெரிதும் அவதிப்பட்டனர்.
ெவப்பத்தை தணிக்கும் வகையில் பழச்சாறு, மோர், இளநீர் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்தினர். மேலும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பெண்கள் குடை பிடித்தபடியும், துப்பட்டா அல்லது சேலை முந்தானையை தலையில் போர்த்தியபடியும் வீதிகளில் சென்றதை காணமுடிந்தது. பகலில் வீட்டில் மின்விசிறியை சுழல விட்டாலும், அனல் காற்றாகவே இருந்தது. சில வீடுகளில் பகலில் ஏ.சி. போடப்பட்டு வெயிலில் இருந்து தற்காத்து கொண்டனர்.
திடீர் கோடை மழை
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால் திருச்சி மாநகரில் குளிர்ச்சியான சீதோஷணம் நிலவியது. ஒருபுறம் பெய்த மழையால் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொருபுறம் சற்று பாதிப்படைந்து மக்கள் அவதியடையவும் செய்தனர்.
எதிர்பாராமல் பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றதை காணமுடிந்தது. இந்த மழையானது திருச்சி மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பரவலாக பெய்துள்ளது. சில இடங்களில் சாரல் மழை தூறல்போல பெய்துள்ளது.
மாணவ, மாணவிகள் அவதி
மழை காரணமாக மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகளும் சற்று அவதிப்பட்டனர். சைக்கிளில் சென்ற மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள் நனைந்தபடியே வீடு திரும்ப நேர்ந்தது. மேலும் காந்தி மார்க்கெட் வியாபாரிகளும், சாலையோர வியாபாரிகளும் மழையால் பாதிக்கப்பட்டனர். சாலையில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கார், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் தேங்கிய தண்ணீரை சிதறடித்தப்படி சென்றன.
மழை காரணமாக கிராப்பட்டியில் உள்ள சிறப்பு காவல்படை முதல் அணி அருகே தரைப்பாலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். திருச்சி கண்டோன்மெண்ட், பாலக்கரை, மத்திய பஸ் நிலையம், ஆழ்வார்தோப்பு, உறையூர், பீமநகர், மலைக்கோட்டை, தில்லைநகர், கே.கே.நகர். எடமலைப்பட்டி புதூர், சுப்பிரமணியபுரம், கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story